Tuesday, July 10, 2012

செல்ல மகள் வருகை !


காய்க்கவில்லை என்று கல்லடி பட்டு
தூரதேசம் போனவர்கள் திரும்பி வந்தார்கள்
இளந்தளிரை சுமந்து கொண்டு.
பத்து மாத புதினத்தை
அத்தியாயங்களாக்கி அடுக்கினார்கள்
ஆசிரமம் ஆசிரமமாய் அலைந்த வலி மறைத்து.

குமட்டலை, தலைசுற்றலை
மேடிட்ட வயிற்றின் ஊரலை
சோகையில் வெளிறிய முகத்தை
நீர்வைத்து வீங்கிய காலை
இளக்கம் கொடுக்க இடுப்பில் ஊற்றிய சுடுநீரை
குடம் உடைந்து மருத்துவமனை விரைந்ததை
தலைதிருப்ப பட்ட பிரயத்தனத்தை
சுகப்பிரசவத்தில் பெண்மகவு பிறந்ததை என

கற்பனை செய்து வைத்த கதையனைத்தையும்
உண்மை போலவே கோர்த்துக் கோர்த்து 
புனைந்தார்கள் கணவனும் மனைவியும்.

சொன்ன பொய்களின் பாரம் தாங்காது
மூச்சழுத்த மார்பு விம்ம
மூர்ச்சையாகி கீழே சரிந்தாள் மனைவி.......

பாதுகாப்பின்மை உணர்ந்து
பரிதவிக்கிறது புதுவரவு.
மயங்கிய நிலையிலும்
குழந்தையின் அழுகைச்சத்தம்
கேட்கக் கேட்க புதிதாய்
பொங்கிக் கசிகிறது மார்பூறும் பால்.

காய்க்காமலே கனிந்து போகிறாள் தாயாக.

******

2 comments:

  1. புதுமை ! .... அருமை !!

    ( இலக்கம் -> இளக்கம்? )

    -மதன்

    ReplyDelete
  2. ஆம், இளக்கம் தான் சரி. மாற்றி விட்டேன்.

    இதுக்குத்தான் ஒருத்தன் வேணும்கிறது :)

    ReplyDelete