Tuesday, May 28, 2013

மழலை


யானை நடை போட்டு
டொண்டாய்ங் ஆடுகிறோம்
கன்னத்தை பொப் செய்து
பலூன் மூட்டை உடைக்கிறோம்
காக்கா நரிக்கதைக்கு
கைகால் முளைக்கவிட்டு
தூரப் பயணம் போகின்றோம்

மறந்து போன பால்யம் எல்லாம்
சட்சட்டென துளிர்விட்டு
துள்ளல் நடை போடுமிந்த
வரம் தந்து சிரிக்கின்றாள்
மகளென்னும் தேவதை.


****
படம் உதவி: http://www.priestsforlife.org/blog/index.php/todays-pro-life-reflection-176/father-watching-his-infant-sleep


Tuesday, May 14, 2013

செல்ஃபோன் - வரமா சாபமா?


தொலைத்தொடர்பின் அசுரத்தனமான வளர்ச்சியினால் இன்று செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை. தொன்னூறுகளில் நூற்றுக்கு ஏழு என்று இருந்த தொலைதொடர்பு அடர்த்தி இன்று இந்தியாவில் நூற்றுக்கு சுமார் என்பது பேர் தொலைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்த வளர்ச்சியினால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு என்றாலும் சில பக்க விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

செல்ஃபோன் என்பது மின்காந்தவியல் கதிர்வீச்சின் மூலமாகவே இயங்குகிறது. நாம் கையில் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனம், பேஸ் ஸ்டேசன் என்று சொல்லக்கூடிய மொபைல் டவரின்  ஆண்டனாவை கம்பியில்லா இணைப்பின் மூலம் கதிர்வீச்சினால் தொடர்பு கொள்வதன் மூலம் இணைப்பு கிடைத்து நாம் தேவையானவர்களுடன் உரையாடுகிறோம். இதில் ஒவ்வொரு செல்ஃபோன் சாதனமும் ஒன்று முதல் மூன்று வாட் (watt) வரையில் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. அதே போல் மொபைல் டவரின்  ஆண்டனாவும் தன் பங்குக்கு சுமார் பணிரெண்டு வாட் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. இது அரசினால் நிர்ணயிக்கப்பட்ட அளவு. 

ஆனால் கொடுமை என்னவென்றால் இந்தியாவில் பெரும்பான்மையான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதில்லை. (பி.எஸ்.என்.எல் மட்டும் விதிவிலக்கு. ஏன்னென்றால் அரசுத் துறையாதலால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக கதிர்வீச்சை வெளியேற்ற விதியும் இடம் தராது, இயந்திரங்களும் ஒத்துழைக்காது) மாறாக பனிரெண்டு வாட் என்ற அளவுக்குப் பதிலாக சுமார் அறுபது வாட் வரை கதிர்வீச்சை வெளியேற்றுகின்றனர் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். விளைவு, எட்டு டவர்கள் பொருத்த வேண்டிய இடத்தில் ஒரு டவர் பொருத்தினால் போதுமானது. இதன் மூலம் அவர்களின் செலவு கணக்கும் குறைகிறது. கதிர்வீச்சின் தன்மை மிக அதிகமாக இருப்பதனால் கண்ணாடி அறை, உள்ளடங்கிய பகுதி, குடோன், அடித்தளம், பரண் என்று சகல இடங்களுக்கும் கதிர்வீச்சு ஊடுருவி சிக்னலும் நன்றாகக் கிடைக்கிறது. சரி, சிக்னல் நன்றாகக் கிடைத்தால் நல்லது தானே. எங்கிருந்தாலும் தெளிவாக இடையூறு இன்றி பேசலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தோராயமாக 40 மீட்டர் உயரமுள்ள செல்ஃபோன் டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கும் பட்சத்தில், டவருக்கு அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் இருந்தால் கூட அதன் வீச்சு மிக குறைந்து மில்லி வாட் அளவிலேயே இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் நமது உடலின் ஒரு அங்கம் போல் எப்போதும் உடன் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனத்திலிருந்து வரும் கதிர்வீச்சானது டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை விட கிட்டத்தட்ட நூறு மடங்கு அதிகமாக இருக்கும். அதிலும் சிக்னல் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் நமது செல்ஃபோன் சாதனம் தானாகவே அதிக கதிர்வீச்சி வெளியேற்றி சிக்னலைப் பெற முயற்சி செய்து கொண்டிருக்கும். இதனால் வரும் அபாயங்களே அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது.

கதிர்வீச்சு அதிகமாக இருந்தால், நாம் தொடர்ந்து அதிக அளவிலோ, நீண்ட நேரமோ செல்ஃபோனை பயன்படுத்தும்போது அதிலிருந்து வரும் கதிர்வீச்சை நாமே நம் உடலுக்குள் செலுத்திக் கொள்கிறோம். இதனால் மூளைப் புற்று நோய், காது கேளாமை, மரபியல் சார்ந்த பிரச்சனைகள் வரலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

சரி, மாறி வரும் உலக நடைமுறையில் தொலைத்தொடர்பில்லாமல் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. அவ்வாறெனில், நாம் செய்ய வேண்டியது என்ன?

வரும் முன் காப்போம்:
  • நீண்ட நேர உரையாடல்களுக்கு எப்போதும் செல்ஃபோனைத் தவிர்த்து, தரைவழி தொலைபேசியையே பயன்படுத்துங்கள். தரைவழி தொலைபேசிகள் முழுவதும் வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டிருப்பதால் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • முடிந்த மட்டும் செல்ஃபோனை உடலுக்கு அருகாமையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பேசும் போது கண்டிப்பாக ஹெட்செட்டோ, ப்ளூடூத் சாதனமோ பயன்படுத்தவும்
  • குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட பி.எஸ்.என்.எல். சேவையை உபயோகியுங்கள்.
  • மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற செல்ஃபோன் சாதனங்களை பயன்படுத்தாமல், குறைந்த அளவு கதிர்வீச்சு அளவுகோல் கொண்ட சாதனமா என்று பரிசோதித்து வாங்கவும்
  • குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனமாக செல்ஃபோனை ஒருபோதும் அறிமுகப்படுத்தாதீர்க்ள். 
  • செல்ஃபோன் என்பது நாம் அலுவலகத்திலோ, வீட்டிலோ இல்லாத பொழுது நம்மை தொடர்பு கொள்வதற்காக உள்ள ஒரு அவசர கால கருவி மட்டுமே என்பதை உணருங்கள்.
  • சுருக்கமாக தெரிவிக்க வேண்டிய செய்திகளுக்கு எஸ்.எம்.எஸ். சேவையை பயன்படுத்துங்கள்
  • ஃபேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டவர் செல்ஃபோன் உபயோகிப்பதனால் தனிப்பட்ட அளவில் பாதிப்புகள் வருவதாக இது வரை உறுதி செய்யப்படவில்லை, இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபேஸ்பேக்கர் பொருத்தப்பட்ட பகுதிக்கு எதிர்ப்புறமுள்ள காதில் வைத்து செல் பேசலாம். மேலும் ஆன் செய்யப்பட்ட செல்லை ஃபேஸ்மேக்கர் கருவிக்கு அருகே கொண்டு செல்லாமல் இருப்பதும் நல்லது.

ஒரு தொழில்நுட்பத்தின் வெற்றி அதை உபயோகிப்பவர்களின் கைகளில் தான் இருக்கிறது என்பார்கள். செல்ஃபோனும் அதற்கு விதிவிலக்கல்ல. அற்புதமான இந்த தகவல் தொழில்நுட்ப சாதனத்தை அளவாக மற்றும் முறையாக பயன்படுத்தி வளம் பெறுவோம்.

தரவுகள்:
http://en.wikipedia.org/wiki/Telecommunications_statistics_in_India
http://en.wikipedia.org/wiki/Mobile_phone_radiation_and_health
http://www.lef.org/magazine/mag2007/aug2007_report_cellphone_radiation_01.htm
http://www.consumer.tn.gov.in/pdf/CP-TelecomCons-Seminar.pdf
http://www.psrast.org/mobileng/mobilstarteng.htm

(ஒரு தொழிழ்நுட்ப கருத்தரங்கிற்காக தயாரித்த கட்டுரை)

******

Tuesday, May 7, 2013

உப்பு நாய்கள் - பெருநகரத்து நிழல் மனிதர்கள்


மலைகள் இணைய இதழில் வெளியான “உப்புநாய்கள் - நாவல்” குறித்த எனது வாசிப்பனுபவம்.

-------------------------------------------
உப்புநாய்கள் - நாவல் / லக்ஷ்மி சரவணகுமார்
உயிர் எழுத்து பதிப்பகம் / விலை ரூ 180.
-------------------------------------------

பெருநகரத்தின் ரயில் நிலையங்களில், நெரிசல் மிகுந்த கடைவீதிகளில், சப்-வேக்களில் என நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதைகளில் எத்தனையோ மனிதர்களை எதிர்கொள்கிறோம். மாத சம்பளம் வரும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அடுத்த மாதத்திற்கான பட்ஜெட்டை அதற்கென வைத்திருக்கும் பிரத்யேக டைரியில் எழுதி வைத்துக் கொண்டு, பைசா கணக்காய் செலவு செய்யும், புறநகர்ப்பகுதியில் ஒரு சொந்தவீடு கட்டுவதை வாழ்க்கையின் ஆகச்சிறந்த லட்சியமாய்க் கொண்டிருக்கும், கண்ணுக்குப் புலப்படாத ஓர் ஒழுக்க நெறிக்கோட்டை தனக்குத் தானே வரையறுத்து, அதை வாய்ப்பு அமையும் போதெல்லாம் பிறருக்கும் உபதேசித்துக் கொண்டு, அப்படி வகுத்துக் கொண்ட கற்பனைக் கோட்டை தானே மீறும் போது அதற்கான வெற்று சமாதானங்களை நாள் முழுதும் மனனம் செய்து கொண்டு, ஊர் வாய்க்காக  வாழ்க்கை நடத்தும் மத்தியதர வர்க்கம் தினம் தினம் சந்திக்கின்ற, தமக்கும் கீழுள்ளவர்கள் என்று எண்ணிக் கொண்டு ஒரு முகச்சுளிப்பில், ஒரு உச்சுக் கொட்டலில் ஒரு ஏளனப்பார்வையில் உதாசீனப்படுத்தி கடந்து செல்லும், தனக்குக் கீழுள்ளவர்கள் என்ற அலட்சியத்தில் ஒரு பொருட்டாக மதிக்காத சக உயிரினங்களைப் பற்றிய ரத்தமும், சதையும், களவும், காமமுமான ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்த “உப்பு நாய்கள்” 
உப்பு நாய்கள் என்ற இந்த புதினத்திற்கு நான்கு கால்கள். ஒவ்வொரு கால்களிலுமாய் பிணைக்கப்பட்ட, வெவ்வேறு அளவுகளுடைய நான்கு சக்கரங்கள் சென்னை என்ற பெருநகரை மையமாய் வைத்து இயங்குகின்றன. ஒன்று வடசென்னையையும், ஆர்மீனியர் சர்ச்சையும், ஆந்திர எல்லையையும், இன்னொன்று ராஜஸ்தான் வரையிலும், மற்றொன்று ஆந்திராவின் உள்ளடங்கிய வரண்ட கிராமம் வரையிலும் இன்னொன்று மதுரையையும் தொட்டு சுழல்கின்றது.  

ராஜஸ்தானின் ஜெய்சால்மீரிலிருந்து புகுந்த வீடாய் சௌகார்பேட்டைக்கு வரும் உலகமறியா சேட்டுப்பெண்ணொருத்தி பணம் ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்ட, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு கருவியாக மதத்தை வைத்துக் கொண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் கூட்டத்தில் ஒருவனாய் இருக்கக்கூடிய, வீட்டு வேலை செய்பவர்கள் தாங்கள் சாப்பிடும் சாப்பாட்டையோ தங்கள் வாழ்க்கை முறையையோ வாழத் தகுதியற்றவர்கள் என்றெண்ணும் வர்க்கத்தின் பிரதிநிதியாய் இருக்கும் கணவனின் இயலாமையால், பொங்கும் தன் காமத்தைத் தணிக்க என்ன வடிகாலைத் தேடுகிறாள், அதனால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்னும் கதை ஒரு வேர். திரையரங்க இருட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனை அருகில் வைத்துக் கொண்டு முகம் தெரியாத புதியவனின் சில்மிஷங்களுக்குத் தன்னைக் கொடுப்பவள், பின் அவன் மூலமாகவே இணைய உலகின் இருண்ட பக்கங்களில் துகிலுறியபட்ட தனது நிர்வாணத்தைக் காண நேர்கையில் தன்னை மாய்த்துக் கொள்கிறாளா இல்லை அதற்குக் காரணமானவனைக் கொல்ல முயல்கிறாளா என்று விரிகிறது ஒரு கிளை.

பதின்ம வயதில் தாயின் பராமரிப்பு சரியில்லாமல், இரந்துண்ணும் நிலைக்கு இறங்கி, பின் அதிகாரமே தனக்கான உணவைக் கொடுக்கும் என தீர்மானிக்கும் ஒருவன், கஞ்சாப்பொட்டலம் விற்பதில் துவங்கி பல ரசவாத வித்தைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்ந்து வரும் வேளையில் ஒரு துரோகத்தை சகிக்க முடியாமல் பழி முடித்து விட்டு பதுங்கி விடுகிறான். மாநகராட்சி இலவச கழிப்பறைகளை சுத்தம் செய்து காசு வசூலிப்பது, மஞ்சளாடை அணிந்து கோவில் திருவிழாவிற்கு நன்கொடை என்ற பெயரில் கல்லாகட்டுவது என்பதில் துவங்கி, பெருநகரத்தில் பிழைப்பதற்கு ஆயிரம் ஆயிரம் தொழில்கள் உண்டு. அவற்றில் பல விநோதமானவையாகவும், நம் கற்பனைக்கெட்டாததாகவும் கூட இருக்கின்றன. அப்படியான ஒரு தொழில் நாய்க்கறி சப்ளை. அசைவ உணவகங்களுக்கு நாய்க்கறியை விற்பது என்பதற்காகவே செய்முறை நேர்த்தியோடு ஒரு குழு இயங்குகிறது. அவர்களுக்குள் ஒரு நாளின் தேவைக்காக, எந்தந்த தெருவில் எத்தனை நாய்களைப் பிடிக்க வேண்டும், அவற்றை எவ்வாறு மடக்க வேண்டும், அதன் கறியை எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்ற தொழில்முறை சூட்சமங்கள் எல்லாம் கூட இருக்கிறது. அதையும் கற்றுத் தேரும் அவன், பின் பவ்வேறு குற்றங்களுக்குப் பின் சிறுமிகளைக் கடத்தி விற்கும் கும்பலுடன் இணைவது வரை செல்கிறது புதினம். தன் நிழலையும் தனக்குள் மறைக்கும் வித்தை கற்ற ஒரு பெயற்ற பறவையின் இருப்பாய் நீள்கிறது அவனது வாழ்க்கை. திறமையான கடத்தல்காரனான அவன், ஆர்மீனியன் தேவாலயத்தின் நிழல் யுத்தங்களையும், அந்தரங்க செயல்பாடுகளையும் முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான். ஆனாலும் அவனது நண்பர்களைப் போல தலைமை ஏற்று ராஜ்ஜியம் ஆளும் எண்ணமெல்லாம் இல்லாமல், பதுங்கி வாழும் பறவையாகவே இருக்க விரும்புகிறான். தேவனின் உருவத்தைப் பார்த்தவாறே வெறி கொண்ட சாத்தானின் முகம் கொண்டவளாய் குருதி சொட்ட தன்னைத் தானே அனுபவித்துக் கொள்பவளை அருகிலிருந்து பார்க்கும் போதும் சரி, யாருக்காகவும் எளிதில் திறக்காத தேவாலயத்தின் விடுதிக்கதவுகள் தனக்காக திறக்கக் காத்திருக்கும் போதும் சரி, அவன் மௌனியாகவே இருக்கிறான். இறுதியில் தன் இருப்பே புலனாகாதவாறு இருந்து இம்சித்து இம்சித்தே, தனது ஆரம்ப கால கூட்டாளியும், தற்பொழுது வேலை கொடுத்து வியூகத்தில் சிக்க வைக்கக் காத்திருப்பவனுமாகிய நண்பனை தற்கொலை செய்ய வைக்கிறான். பின் தன் அறியாமையால் தன்னைத் தொலைத்து பின் அதைக் கலையாக கற்றுத் தேர்ந்தவளின் கிளையில் அரூபமாக அடைகிறான், ஒரு நிழலற்ற பறவையைப் போல.

ஆந்திர தேசம் கடப்பா தாண்டி வெக்கை படிந்த ஜம்பலகுடு கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க தாய் தந்தையுடன் சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி அலுவலகங்களுக்கும், அபார்ப்மெண்ட்களுக்கும் கட்டட வேலைக்கு வரும் ஒரு சிறுமியின் பிரகாசமான கண்களின் காட்சி வழி விரிகிறது இன்னொரு வட்டம். அவளுக்கு தன் சிறிய கிராமத்தைத் தாண்டி வெளியுலகில் பார்க்கும் எல்லாவற்றிலும் ஆச்சர்யம். அதுவும் கடல் இருக்கிறது என்பதற்காகவே அவளுக்கு சென்னையை மிகவும் பிடிக்கிறது. அவளது கிராமத்தில் அவளது பெயர் ஸர்ப்பப்பெண். உடலெங்கும் வெம்மையைக் கொண்டிருக்கும் பாம்புகளைப் பிடித்து விளையாடுவது தான் அவளது பொழுபோக்கு. அவள் எப்போதும் தன்னையும் ஒரு பாம்பாகவே நினைத்துக் கொள்கிறாள். சரியான வாழ்வாதாரம் இல்லாமல் சொந்த மண்ணிலிருந்து சென்னை வந்த அவளின் குடும்பத்தையொத்த மக்களுடன் தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அருகிலேயே அவர்களும் டெண்ட் அடித்து வசித்து வருகிறார்கள். சரியில்லாத சேர்க்கையினால் குடிக்கு அடிமையாகி கடைசியில் தன் மனைவியை இன்னொருவனுக்கு கூட்டிக் கொடுக்குமளவிற்கு சீரழிந்த தகப்பனின் மரணத்தை மௌனமாய் பார்க்கிறாள் அந்த சிறுமி. தன் கணவனின் சடலத்தையும் அடையாளம் காட்ட விருப்பமற்றவளாய் தன் தாய் மாறி இருப்பதை உணர்கிறாள். பின் பிழைக்க வழியறியாது, சென்னை வேண்டாம் என்று தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுக்கும் தருவாயில் தனக்காக அன்பு செலுத்தவும் ஒரு உள்ளம் இருப்பதை உணர்ந்து, அந்த தாய்மனம் கொண்ட யுவதியின் அரவணைப்பில் அடைக்கலமாகிறாள்.

குடுமபம் சகிதமாய் பிக்பாக்கெட் தொழில் செய்து வரும் மதுரையைச் சேர்ந்த ஒருத்தி தன்னைக் காத்துக் கொள்ள் வேண்டி தன் நாத்தானாருடனும், குடும்பத்துடனும் சென்னைக்கு வரும் சித்திரம் இன்னொன்று. மிகப்பெரிய அந்த நகரத்தின் ஜனத்திரள் அவளது தொழில் மூளைக்கு உவகை தருவதாக இருக்கிறது. அசிரத்தையான ஒரு நாளில் தொழில் பிசகி மட்டிக் கொள்ள நேர்கையில், காவல் நிலையத்தில் அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலை அவளுக்கு மிக விநோதமாகத் தெரிகிறது. வெளிப்படையாய் பங்கு கேட்கும், சிறு சிறு அடியாட்களிடமும் பணிந்து போகும் காவலர்களை பார்க்கையில் அவளுக்கு தான் இருப்பது காவல்நிலையம் என்ற பயம் கூட அற்றுப் போகிறது. பின் காவல் நிலையத்திலேயே அறிமுகமாகும் ஒருவனின் மூலமாக கடத்தல் பொருட்கள் எடுத்துச் செல்லும் குருவியாக மாறுகிறாள். பின்னொரு நாள் வர்த்தகம் செய்து கொள்பவனின் துரோகத்தால் சிறை செல்ல நேரும் போது, அங்கு தன் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் பழைய தோழியை சந்திக்கிறாள். அவளை வஞ்சித்து விட்டு தான் வந்த போதும், அதைப் பொருட்படுத்தாமல் தனக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த முரட்டு ஜீவனின் மீது இவளுக்கும் புதியதோர் பிடிப்பு ஏற்படுவதாய் நீள்கிறது அவளது கதை.

இவ்வாறு நான்கு வெவ்வேறு அடுக்குகளில் பயணிக்கும் புதினத்தின் பிடி நூல் சென்னை என்ற மாநகரம். இருள்படர்ந்த நகர வீதிகளில் நடக்கும்  அன்றாடம் நம்மை வெகு சாதாரணமாக கடந்து செல்லும் இந்த மனிதர்களை, அவர்களின் வாழ்வை கூட இருந்து வாழ்ந்தது போன்று துல்லியமான ஒரு பார்வை புதினத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த புதினத்தின் மொழி, பேசுபொருளுக்கு நெருக்கமாய் உணர வைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்கான முனைப்புடன் கட்டமைக்கட்டிருக்கிறது. மொத்தத்தில் பெருநகர இருட்டில் முகம் தொலைத்து அலைந்து கொண்டிருக்கும் எண்ணற்றவர்களின் வாழ்க்கைப் படிமத்தின் ஒரு கீற்றினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த “உப்பு நாய்கள்”

(வாசிக்க வேண்டியவற்றில் இந்த புத்தகம் இருக்கிறது என்று சொன்னவுடன், பரிந்துரை செய்தததோடு மட்டுமல்லாமல் அடுத்த நிமிடமே புத்தகத்தை கையில் கொடுத்து வாசிக்கச் சொன்ன நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி )

உப்புநாய்கள் - நாவல் / லக்ஷ்மி சரவணகுமார்
உயிர் எழுத்து பதிப்பகம் / விலை ரூ 180.

நன்றி : மலைகள் இணைய இதழ் : http://malaigal.com/?p=1905
******

Wednesday, May 1, 2013

மொழிபெயர்ப்புக் கவிதைகள்


சினுவா ஆச்சிபி கவிதைகள் (தமிழில் வி.பாலகுமார்)



அகதிகள் முகாமில் ஒரு தாய்
------------------------------------------------
 எந்த மாதரசியும் பச்சிளம் குழந்தையும் கூட

தனது மகனின் இனமென்மைக்கு அருகிலும் வர முடியாது.

என்ற நினைவை அவள் விரைவில் மறக்கத்தான் வேண்டும்…


துருத்தும் விலாவெலும்புகளையும்

வற்றிய வயிறையுமுடைய குழந்தைகள்

வலியால் முனகிய படி குதித்தோடுகின்றன

குளிப்பாட்டப்படாத அவர்களின் மேனியிலிருந்து வீசும்

வயிற்றுப்போக்கின் துர்நாற்றம்

காற்றெங்கும் அடர்ந்திருந்தது


மற்ற தாய்மாரெல்லாம்

எப்பொழுதோ குழந்தைகளுக்கான

பிரத்யேக கவனிப்பை நிறுத்தியிருந்தனர்

ஆனால் அவளால் அவ்வாறு

இருக்க முடியவில்லை.

அவள் இதழோரம் வறட்டுப் புன்னகையும்

கண்களில் தாய் என்ற பெருமையையும்

இப்போதும் ஏந்தியபடியிருந்தாள்.


அவள் தனது வெற்று உள்ளங்கைகளினால்

மகனைத் தேய்த்துக் குளிப்பாட்டினாள்,

தான் வைத்திருந்த உடைமைகளின்

பொதி மூட்டையிலிருந்து

ஓர் உடைந்த சீப்பை எடுத்து

செம்பட்டை படிந்த அவனது முடியினை

நிதானமாக சிக்கெடுத்து தலை வாரினாள்.


இது அவர்களது முந்தைய வாழ்க்கையில்

அவன் பள்ளிக்குச் செல்லும் போது

காலை உணவுக்குமுன் அன்றாடம் நிகழக்கூடிய

ஒரு சாதாரண நிகழ்வு

ஆனால் இப்பொழுது அவளது இந்த செய்கை…

ஒரு சிறிய கல்லறையில்

மலர்களை வைத்து

அஞ்சலி செலுத்துவது போல இருந்தது.

***********

வண்ணத்துப்பூச்சி
---------------------------
 வேகம் எனபது வன்முறை

திறன் என்பது வன்முறை

நிறை என்பது வன்முறை


எடையற்று அலையூசலாடிப் பறக்கையில்

கனமின்மையில் பாதுகாப்பை நாடுகிறது

வண்ணத்துப்பூச்சி


ஆனால், பல்வண்ண படரொளி விழும்

சரளைக் கற்கள் பரவிக்கிடக்கும்

நெடுஞ்சாலையின் சந்திப்புகளில்

நமது ஒருங்கூடும் பிரதேசங்கள் இணைகையில்…


நான் திறம்பெருக்கி இறுமாப்புடன்

மோதலுக்குத் தயாராகத்தான் வந்தேன்

எனினும்

மென்மையானதொரு வண்ணத்துப்பூச்சி

ஒளிரும் மஞ்சள் நிவேதனத்தால்

எனது கடின மண்ணியக்கவசத்தின் மீது

தன்னையே முழுதாய் சமர்ப்பிக்கிறது

 *********************

வசந்தகாலபைன்மரம்
-------------------------------------------------

 தனித்திருக்கும் நேரங்களின் மீறலினூடே

பசுமை நினைவுகளை

தாங்கி நிற்கும் முன்னோடி இந்த பைன் மரம்


இயற்கையின் கிடைநிலை படிமத்தின்

கொடும் மரகதத்தீவிலும்

தனித்துக் காவல் நிற்கும் விசுவாசி இந்த மரம்


வெட்கங்கெட்டு பகட்டாக,

வஞ்சனைகளுடன் பவனி வரும்

துரோகத்தின் நிழலில்

தற்பொழுது

தொலைந்து நிற்கிறது இந்த மரம்


நேர்த்தியுடன் நிமிர்ந்து நிற்கும் உன்னத மரமே,

எந்தப்பள்ளி எனக்கு கற்றுக் கொடுக்கப்போகிறதோ,

உனது அமைதியான உறுதியான நாணயத்தை?

***********************
நன்றி: மலைகள் இணைய இதழ்