Monday, August 26, 2013

விருட்சத் திருவிழா



மதுரையைச் சுற்றிய தொன்மையான இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அந்த இடங்களைப் பார்வையிடவும் என்று குழுமிய நண்பர்கள் “பசுமை நடை” என்ற அமைப்பை உருவாக்கி, மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை மலைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பசுமை நடை குழுவினரின் இருபத்தி ஐந்தாவது பயணத்தையொட்டி சிறப்பு ஏற்பாடாக “விருட்சத் திருவிழா” நடைபெற்றது.

நேற்று (25/08/2013 - ஞாயிறு) மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் நடைபெற்ற “விருட்சத் திருவிழா”விற்குச் சென்றிருந்தோம். மலையடிவாரத்தில் அமைந்துள்ள குளத்தின் கரையிலுள்ள ஆலமரங்களின் பிரம்மாண்ட நிழலில், இயற்கையான சூழலில் இனிதே நடந்தது திருவிழா. இந்த அமைதியான சுற்றுப்புறத்தின் காரணமோ இல்லை “பசுமை நடை”யின் இயல்போ தெரியவில்லை, விழா முழுமையுமே நிதானமாக, வெற்று பரபரப்பின்றி, இயல்பான இளைப்பாறுதல் தருவதாய் அத்தனை சுகமாக இருந்தது. விழாவில் பேசியவர்களும் மேடைப்பேச்சு போல நீட்டி முழக்காமல், தேர்ந்த கதை சொல்லிகள் போல் மென்மையாகவே பேசியது கேட்க இதமாக இருந்தது.

பொதுவாக பொதுப்பயன் கருதிய சமூக நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் “ஒளிவட்டம்” பொருந்திய பிரபலங்களின் வரத்து அதிகமாய் இருந்தால், நிகழ்ச்சியின் மையப்புள்ளியை விட்டுவிட்டு இந்த பிரபலங்களைச் சுற்றியே கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனாலேயே அத்ததைய நிகழ்வில் ஒன்ற பார்வையாளர்களுக்கு சிறு மனத்தடங்கல் இருக்கும். ஆனால் நேற்று நடந்த “விருட்சத் திருவிழாவில்” அத்தகைய ஒளிவட்டங்களின்றி ஒரு குடும்ப விழா போன்று ஆளாளுக்கு இழுத்துப் போட்டு அனைத்து வேலைகளையும் இயல்பாக செய்தனர். அதுவும் சுறுசுறுப்பாக இங்குமங்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த இளைஞர்கள் இணையமேற்றுவதிலிருந்து இலையெடுப்பது வரை புகுந்து விளையாடினர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “விளையாட்டு முகாம்”. கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், களிமண்ணில் பொம்மை செய்தல் என்று அமர்க்களப்படுத்திவிட்டனர். குழந்தைகளைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, அவர்களை அலுப்படைய விடாமல் தொடர்ந்து உற்சாகமூட்டி பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்திய தன்னார்வலர்களின் பணி பாராட்டுதற்குரியது. தன்னார்வலர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் போன்று தான் தோன்றினார்கள். தங்களுடைய விடுமுறையை இவ்வாறு சமூக நிகழ்வுகளுக்காக, அதுவும் மைய நிகழ்வு தனியாக நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் குழந்தைகளை விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான பொழுபோக்கில் ஈடுபடுத்தும் பணிக்காக வந்திருந்து ஆர்வத்துடன் பங்கேற்றது வியப்பாய் இருந்தது. இறுதியில் முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பரிசுப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 

விழாவில், மதுரையைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, அழகர்மலை கிடாரிப்பட்டி, யானைமலை, திருப்பரங்குன்றம், கீழகுயில்க்குடி உள்ளிட்ட பல்வேறு பழமை வாய்ந்த இடங்களைப் பற்றிய ஆவனம், “மதுர வரலாறு” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், தேநீரும், பருத்திப்பாலும், மதியம் உணவும் வழங்கப்பட்டது. மொத்தத்தில் நம் பூர்வீக கிராமத் திருவிழாவிற்கு சென்று ஊர் சுற்றிவிட்டு, குளக்கரையோரத்து ஆலமர நிழலில் காலாற அமர்ந்து சொந்த பந்தங்களிடம் கொஞ்சம் கதைகேட்டுவிட்டு, பார்த்துப் பார்த்து பசியாற்றிய நண்பர்களின் விருந்தோம்பலில் வயிறு நிறைய உண்டு வீடு திரும்பிய மகிழ்வைத் தந்தது நேற்றைய முற்பகல் பொழுது. பிரதிபலன் பாராது விழாவை முன் நின்றும், பின் நின்றும் சிறப்பாக நடத்தியிருக்கும் பசுமை நடை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மனம்நிறைந்த வாழ்த்தும், நன்றியும்.



படங்கள்: நன்றி - இணையம்
******

Tuesday, August 13, 2013

சார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்


இன்னிக்கு அதிகாலை ஆறு மணிக்கு காலிங் பெல் சத்தம். இரண்டு பேர் பக்கா யூனிஃபார்மல வந்து, “நாங்க ப்ரஸ்ல இருந்து வர்றோம். ”குடும்பத்தலைவர்”ட்ட முக்கியமான விஷயம் பேசனும்”னு சொல்லி இருக்காங்க. எங்கம்மா என்னமோ ஏதோனு என்னை எழுப்பி விட, நான் “ஆறு மணிக்கு கூப்ட்டு விசாரிக்கிற அளவுக்கு என்ன பண்ணிட்டோம்”னு யோசிச்சுட்டே வந்தேன்.

சார், நாங்க “ஹிந்து” நியூஸ் பேப்பர்ல இருந்து வர்றோம். ஹிந்துல தமிழ் பேப்பர் வரப்போகுது. ஆறுமாத சந்தா 375 ரூபாய் சார், கட்டுறீங்களா?

(அடப்பாவிகளா, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லயாய்யா) பேப்பர் என்ன பெயர் சொன்னீங்க?

”ஹிந்து” சார்

(யே, என்னைப்பார்த்தா கொஞ்சம் மாங்கா மாதிரி தான் இருக்கும், அதுக்காக இப்படி ஓட்டாதே!) இல்லங்க. தமிழ்ல வர்றதுக்குப் பெயர் என்ன?

ஹிந்து தமிழ் பேப்பர் சார்.

(சூப்பர் ஆன்சர்) சரி விடுங்க, வழக்கமா புதுப்பேப்பர் வர்றதுக்கு முன்னாடி சாம்பிள் வருமே, அது மாதிரி இருக்கா? (ஓசி சாம்பிள் வாங்கி யூஸ் பண்ணிப்பார்க்காட்டா நாம என்ன தமிழன்)

இல்ல சார், ப்ரௌச்சர் தான் இருக்கு. பார்க்குறீங்களா?

சரி கொடுங்க. (அது ஓசி தானே!)

இந்தாங்க சார். வேற காப்பி இல்ல, பார்த்துட்டு திருப்பிக் கொடுத்துருங்க.

(அது வேறயா, தெளிவாத்தாய்யா மார்க்கெட்டிங் பண்றீங்க) இல்லங்க சந்தோசம், நீங்களே வச்சுக்கங்க.

சார், ஆறு மாத சந்தா போட்றவா சார்?

(காரியத்துல கண்ணா இருக்காராமாம், ஆனா நம்மகிட்டயேவா) இல்லங்க பேப்பர் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்.

சார், ஹிந்து சார். ஆஃபர் பிறகு கிடைக்காது சார்.

(நாங்கெல்லாம் பல வருசமா தினத்தந்தியவே டீக்கடை க்யூல நின்னு தான் ஓசில படிச்சிட்டு வர்றோம், எங்ககிட்டயேவா?) ரொம்ப நன்றி சார். போய்ட்டு வாங்க சார்.

ஆனாலும் “தி ஹிந்து”வின் மார்க்கெட்டிங் திறமை வியக்க வைக்கிறது. ஊர் முழுக்க இதுக்குன்னு நூத்துக்கணக்கான இளைஞர்களை இறக்கி விட்டிருக்காங்க. ஆனா, பேப்பருக்கு என்ன பெயர்னு சொல்ல மாட்டாங்களாம். எப்போல இருந்து வருதுன்னு தெரியாது. மாடல், ஃப்ரிவியூ எதுவும் கிடையாது. சந்தா மட்டும் முதல்லயே கட்டிட்டு பேப்பர் வர்றதுக்காக தேவுடு காக்கனுமாம். ஒரு வேளை நாம கொடுக்குற காசெல்லாம் சேர்த்து வச்சு தான் பூஜை போடப்போறாங்களோ என்னவோ!

******

Monday, August 12, 2013

ஒரு போத்தல் மது


ஒரு போத்தல் மது...

கொஞ்சம் கிறக்கத்தை கொடுத்து,
குழறல் பேச்சில் சில தற்பெருமைகளை
வெளிக்கொணர்ந்திருக்கும்

மூளையை மழுங்கடித்து
ஏதேனுமொரு ஒழுக்கக்கோட்டின்
எல்லையை தொட வைத்திருக்கும்

அர்த்தமில்லாதவொரு கொண்டாட்டத்தில்
வெற்றுக்கூச்சலை கொட்டியிருக்கும்

மனதை சொஞ்சம் பூஞ்சையாக்கி,
வாய்விட்டு அழ வைத்திருக்கும்

வாழ்நாளின் சில மணித்துளிகளை
குறைத்திருக்கும்.

இல்லையென்றால்....

சொந்த ஊரிலிருந்து
முன்னூறு கிலோமீட்டர் தள்ளிப்போய்
கவனமாய் தகுந்த அடையாளங்களை
பதிந்து எடுத்த அறையினுள்,
மிரிண்டாவில் பொட்டாஷியம் சல்ஃபேட்
கலந்து குடித்து மரித்துக் கிடந்த ஒருவனின்
தற்கொலையைத் தவிர்த்திருக்கும்.

******