Tuesday, August 19, 2014

வாதையின் இசை

சருகுகள் பூத்துக் கிடக்கும்,
மதிகெட்டான் சோலையில்
ஊர்ந்து ஊர்ந்து
தடம் தேடிச்செல்கிறது திசைமாணி

காலங்களின் ஈரம்
அடர்த்தியாய் இறங்கியிருக்கும்
விருட்சத்தின் பெருங்கிளைகள்
தோலுரித்துக் கொள்கின்றன

பொருள் விளங்கவியலா
ஆதிக்குடியின் பாடலாய் ஒலிக்கிறது,
தன் இணையை
துப்பாக்கிக் குண்டுக்குப் பறிகொடுத்த
பெயர் தெரியாத பறவையின் கேவலோசை

காலம், மொழி, பெயர் மறந்து
வாதையின் இசையை நுகர்ந்தபடி
திட்டுத் திட்டாய் உதிரப்போக்கை
முதன்முறையாக உணர்கின்றாள்
மலையக கிராமத்து சிறுமியொருத்தி

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

No comments:

Post a Comment