Monday, January 25, 2016

விருதைத் துறந்த கலைஞன்

கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. நாட்டின் உயரிய கௌரவங்களில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருதினை எழுத்தாளர் ஜெயமோகன் மறுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனை இணைய வழக்கப்படி ஒரு “மீம்” தயாரித்துப் போட்டு கலாய்த்துவிட்டு கடந்து செல்ல வேண்டுமா இல்லை அவரது ரசிகத் தொண்டர்கள் போல அவரது அருமை பெருமையை சில பல பத்திகள் எழுதி, அவர் இந்த விருதுக்கெல்லாம் மேலே என்பது போன்ற வரிகளை நடுநடுவே தூவி, இறுதியில் அவர் இதனைப் பெற்றுக்கொள்ளாததால் பச்சைத்தண்ணீர் பருகாமல் வாடிக்கொண்டிருக்கின்றேன் என்று இரண்டு சொட்டுக் கண்ணீரை காணிக்கையாக்கி முடிக்க வேண்டுமா தெரியவில்லை.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகிவருவதால் பலரும் தாம் வாங்கிய விருதுகளை திருப்பித்தருவதாக கூறிவரும் காலகட்டத்தில், தற்பொழுதைய மத்திய அரசின் சித்தாந்தங்களில் ஒத்துப் போகிற, இந்து ஞான மரபைப் போற்றுகின்ற ஜெயமோகன் அவர்கள் இந்த விருதை மறுத்திருப்பது வியப்பையே தருகிறது. தான் இந்த விருதைப் பெற்றுக்கொள்வது என்பது, தன் ஆகச்சிறந்த படைப்பான “வெண்முரசு” எழுதிவருவதும், தன்னுடைய தொடர்ந்த இலக்கிய செயல்பாடுகளும் இத்தைய விருதுகளுக்காகத் தாம் என்று தன்னைத் தூற்றுபவர்கள் பேச வழிவகை செய்துவிடும். அதனாலேயே இந்த விருதினை தான் மிகுந்த மன வருத்தத்தோடு மறுப்பதாக பதிவு செய்திருக்கிறார். இது மிக வலிமையற்ற வாதம் என்பது அவருக்கே கூட தெரிந்திருக்கக்கூடும்.
மத்திய அரசின் முன்னாள் ஊழியர் என்ற முறையில் நாட்டில் விருதுகளுக்கான தகுதியுரைகள் (citations) மற்றும் பரிந்துரைகள் (recommendations) எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன, கோப்புகளுக்கான தரவுகள் எவ்வாறு திரட்டபடுகின்றன, அதிலுள்ள காரியச்சிக்கல்கள், விடுபடல்கள், தொடர்முயற்சிகள் இவற்றையெல்லாம் அவர் நன்கு அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். இருந்தும் கடைசி நேரத்தில் விருதினை அவர் மறுத்திருக்கிறார். தான் இதற்கெல்லாம் தகுதியுள்ளவன் தான் என்று நிரூபித்துப் பிறகு இது தன்னை எவ்விதத்திலும் சலனப்படுத்தவில்லை என்று நிறுவது ஒரு வகை ஹீரோயிஸம் அல்லது ஒரு வகை பற்றற்ற நிலை. இதில் எந்த எண்ணத்தில் அவர் விருதினை மறுத்தார் என்று தெரியவில்லை. அல்லது தனது தகுதிக்கு இந்த விருது ஏற்புடையதல்ல என்று அவர் எண்ணியிருந்தாலும், அடுத்து பிற்காலத்தில் இன்னும் பெரிய விருதுகளுக்கு இவர் பெயர் பரிந்துரை செய்யப்படும் பொழுது இச்சம்பவம் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதே உண்மை. இவர் உள்ளூர் சண்டை காரணமாக இதனை மறுத்தார் என்ற சம்பவம் எல்லாம் அரசாங்கத்தின் கோப்புகளில் பதிவாகப்போவதே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, “வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும், அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது” என்று அவர் கூறியது சத்தியமென்றால், தன் வாழ்நாள் அனைத்தையும் தன் எழுத்துக்காக, தனக்குக் கிடைக்கின்ற தனிப்பட்ட புகழை ஒதுக்கிவிட்டு தன் படைப்பின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். (ஆனாலும் கூட இவர் இவ்விருதினை மறுப்பதால் அது வெண்முரசிற்கு பெருமை சேர்க்கும் என்று கூறுவதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.)
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுப்பக்கங்களை மேய்ந்ததில் சில தகவல்கள் கிடைத்தன. நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விற்கு மட்டும் பிரதமர் நேரடியாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யலாம் போல. மற்ற விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகியவற்றிற்கு மாநில அரசுகள், மத்திய அமைச்சகம், மத்திய அரசுத்துறை, ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் பரிந்துரை செய்யலாம். இவர்கள் தவிர சுயபரிந்துரைகளும் ஏற்கப்படும். பிரதமரை உள்ளடக்கிய குழு வந்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியுள்ளோர்க்கு விருதுகளை வழக்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்கள், ஜனாதிபதியின் பார்வைக்குப் பிறகு அவர் விருதுகளை அறிவிப்பார் என்று அறிகிறேன். ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பரிந்துரைகள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு குடியரசு தினத்தின் போது விருதுகள் அறிவிக்கப்படும். ஆயிரக்கணக்கில் பரிந்துரைகள் பெறப்பட்டாலும், ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 120 பேர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமாக இன்னொரு தகவல், இந்த “பத்ம விருது” பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ இந்த விருதின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த விருதுகளுக்கு பணப்பரிசு எதுவும் கிடையாது. அப்புறம் மிக முக்கியமான இன்னொன்று, விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை சில நாட்களுக்குப் பின் அரசின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள். உண்மையில் யார் யார் பெயர் பரிந்துரையில் இருந்தது என்ற தகவல் அதில் இருக்கும் :)

பத்ம விருதுகள் பெற்றிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் !
தரவுகள்:
http://mha.nic.in/awards_medals
http://mha.nic.in/sites/upload_files/mha/files/Scheme-BR.pdf
http://timesofindia.indiatimes.com/india/Govt-invites-nominations-for-Padma-awards-2016/articleshow/48526263.cms
http://www.jeyamohan.in/83792#.VqY2Q5p97IU

******

Saturday, January 23, 2016

அஞ்சல் நிலையம் - மொழிபெயர்ப்பு நாவல்


எனது முதல் மொழிபெயர்ப்பு நாவலான “அஞ்சல் நிலையம்” தற்பொழுது வெளியாகி இருக்கிறது. புகழ்பெற்ற கவிஞரான சார்லஸ் புகோவ்ஸ்கியின் முதல் நாவல். புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே இந்த நாவல் கருதப்படுகின்றது. அரசுத்துறையின் சட்டதிட்டங்களுக்குள் வளைந்து கொடுக்க முடியாத, இயல்பு வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாத, சூதாட்டம், பெண்பித்து, குடி ஆகியவற்றைக் கொண்டாடும் ஓர் எதிர்நாயகனின் வாழ்க்கை இந்த நாவல்.

சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவிலும், இணையம் மூலமும் விற்பனைக்கு உள்ளது. விருப்பமுள்ள நண்பர்கள் வாங்கலாம்.

புதினம்: அஞ்சல் நிலையம்
- சார்லஸ் புகோவ்ஸ்கி ( தமிழில்: பாலகுமார் விஜயராமன் )
விலை:  ரூ.200.00
பதிப்பகம்: எதிர் வெளியீடு

சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்:
அரங்கு எண்: 151 – எதிர் வெளியீடு
அரங்கு எண்: 90 - நாகரத்னா பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://goo.gl/a5JjUn (இணையதளம்: www.wecanshopping.com)

தபால் மூலம் பெற:
VPP / INDIA POST மூலம் புத்தகம் கிடைக்க: +91 8489401887 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பலாம்

மொழிபெயர்ப்பு குறித்த நண்பர்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.
******